ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல் ரவி, ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஆர்.கே நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். ஆனால் இந்த வழக்கை தொடர்ந்துள்ள ரவி 246 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. வாக்களிக்க யார் பணம் கொடுத்தது, யார் வாங்கியது என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே வாக்களார்களுக்குப் பணம் கொடுத்து தான் டிடிவி தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் நிரூபிக்கவில்லை. எனவே இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.