ஜம்மு: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இம்மாதம் ஜூன் 23-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார் என ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்து வந்த பிடிபி -பாஜக கூட்டணி அரசில் இருந்து நேற்று பாஜக வெளியேறியது. அதன் காரணமாக முதல்வர் மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதை தொடர்ந்து இன்று ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போனதை தொடர்ந்து இந்த முடிவை எடுத்ததாக பாஜக தெரிவித்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா வரும் சனிக்கிழமை (ஜூன் 23ம் தேதி) ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். ஆட்சி கவிழ்ந்த பின் அமித் ஷா அங்கு செல்வது இதுவே முதல் முறை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா ‘‘பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்தவும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்பார்வையிடவும் அமித் ஷா இங்கு வருகிறார்’’
‘‘சனிக்கிழமை அன்று பிராமண சபா பேரணி சாலை எதிரே நடக்கவுள்ள பிரமாண்ட பேரணியில் அமித் ஷா மக்கள் மத்தியில் உரையாற்றுவர்’’என ரவீந்தர் ரைனா கூறினார்.