சென்னை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாநகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் மனைக்காக கடந்த 1998 ஆம் ஆண்டு பங்களிப்புத் தொகையாக ரூ.14 ஆயிரத்து 50 ஐ செலுத்தியுள்ளார். ஆனால் செல்லையா உள்ளிட்டோருக்கு ஒதுக்கப்பட்ட மனைகள் ரத்து செய்யப்பட்டன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் செல்லையாவுக்கு வீட்டுவசதி வாரியம் மனை ஒதுக்கீடு செய்யக்கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வீட்டுவசதி வாரியத்தின் செயற்பொறியாளர் பூபதி அமல்படுத்தவில்லை. இதனையடுத்து செல்லையா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இரண்டு முறை சந்தர்ப்பம் வழங்கியும் பூபதி விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே பூபதிக்கு ஜாமீனில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் பூபதியை வரும் மார்ச் 16 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அண்ணாநகர் துணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.