பெண்கள் இல்லாமல் விவசாயம் இல்லை: மகளிர் தினவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சென்னை ராயப்பேட்டையில் மகளிர் தின விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை; அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன்.
திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது; நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவலர்களை பாராட்டாமல், தவறாக செயல்படும் காவலர்களை தண்டிக்க முடியாது. திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகான்களை நாம் தேடிக்கொண்டு இருக்கிறோம், மேடையில் அமர்ந்து இருப்பவர்களே மகான்கள் என்று பேசினார். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும் நியாயமும் புரியும். தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிய விஷயம் தெரிந்தவர்கள், மய்யத்திற்கு வாருங்கள். என்னை ஜல்லிக்கட்டு மாடாக ஆக்கிவிடாதீர்கள். நான் உழவு மாடு என்மேல் ஏர் பூட்டி விவசாயம் செய்யுங்கள். இதையேன் இங்கு சொல்கிறேன் என்றால் பெண்கள் இல்லாமல் விவசாயம் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.