சென்னை: சசிகலா கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடராஜனுக்கு அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டதையடுத்து, பின்னர் உடல் உறுப்புதானம் பெற்று நலமடைந்தார்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி நெஞ்சக நோய் தொற்று காரணமாக மீண்டும் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலே இருந்து வந்த நடராஜனை, மருத்துவமனையில் வைகோ, பழ.நெடுமாறன், வைரமுத்து உள்ளிட்டோர் நடராஜன் உடல்நிலையை கேட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக நடராஜன் உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு தற்போது பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பெசன்ட் நகரில் நடராஜன் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருகிறார் சசிகலா.