மதுரை: குரங்கணி மாலை காட்டுத் தீ விபத்தி சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம், போடி குரங்கணி தெற்கு பிரிவு வனப் பகுதியில் ஒத்தை மரம் என்ற இடத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி பரவிய காட்டுத் தீயில் சிக்கி, சென்னை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலிருந்து மலையேற்றப் பயிற்சிக்காக இரண்டு குழுக்களாக வந்திருந்த 36 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலும், 9 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் 56 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரை சேர்ந்த சாய் வசுமதி, சென்னையைச் சேர்ந்த நிவ்ய நிக்ருதி ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக, விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா நேற்று முன்தினம் புதன்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், விபத்து நடந்த சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டும், மலையேற்றப் பயிற்சி குழுக்கள் தீ விபத்தில் சிக்கியபோது, அவர்களை மீட்ட குரங்கணி, கொழுக்குமலை கிராம மக்கள், மலையேற்றப் பயிற்சி மருத்துவர் என்.ஆர்.டி. ராஜ்குமார், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெகதீசன், 10 பேரைக் காப்பாற்றி அழைத்து வந்த வழிகாட்டி ரஞ்சித் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
இன்று வெள்ளிக்கிழமை முதல் விபத்து குறித்து விசாரணை நடத்திய பின்னர், இது குறித்த முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் 56 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரை சேர்ந்த சாய் வசுமதி, சென்னையைச் சேர்ந்த நிவ்ய நிக்ருதி ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.