வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவில் தஞ்சம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஜார்வீதி, திரு.வி.க.நகர், லால்மசூதிதெரு, ஒத்தவாடை தெரு, ஏரிகுத்திமேடு, காமராஜர் நகர், தரைக்காடு போன்ற பகுதிகளில் இன்று காலை 7.05 மணியளவில் 2 தடவை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. முதலில் லேசாக உணரப்பட்ட அதிர்வு, பின்னர், பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்து உருண்டன.
இதனை உணர்ந்த பொதுமக்கள் பதற்றத்துடன் வேகமாக வீடுகளை விட்டு வெளியே வந்து தெரு பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஏரிகுத்தி மேட்டில் சிலரது வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தாசில்தார் மகாலிங்கம் நில அதிர்வு உணரப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.