லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் திருமணம் நடைபெறப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரேபரேலி சதார் தொகுதியில் ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் அகிலேஷ் சிங். இவரது மகள் அதிதி(29). அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர் 2017-ல் அரசியலில் நுழைந்தார். பின்னர், உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதிதி சிங்குடன் இருக்கும் படமும், சோனியாகாந்தி அதிதியின் பெற்றோருடன் இருக்கும் படங்கள் சனிக்கிழை சமூக ஊடகங்களில் வைரலாக ஆரம்பித்தன. அந்தப் படங்களில் ராகுல்காந்தி திருமணத்துக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுத்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சோனியா காந்தி இருவரின் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றன.
இது குறித்து அதிதி சிங்கிடம் கேட்டபோது தனக்கும் ராகுல்காந்திக்கும் திருமணம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது யாரோ சிலர் பரப்பிவிட்ட வதந்தி என்றும், ராகுல்காந்தி தனது அண்ணன் போன்றவர் என்று தெரிவித்தவர், ராகுலும் சோனியாவும் ரேபரேலியில் தங்கள் வீட்டுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட படங்களை, வதந்தியைப் பரப்புவதற்காகச் சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும், இதற்கும் பின்னால் உள்ளவர்கள் முற்றிலும் தவறானவர்கள் என அதிதி சிங் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக பேரவை தேர்தல் முடிந்தவுடன் விரைவில் ராகுல் காந்தியுடன் எனக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளால் மிகவும் வருத்தப்படுகிறேன் என அதிதி தெரிவித்தார்.
இதுபோன்ற வதந்திகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், அதற்கான எண்ணம் என்னவாக இருக்கும் என்று கர்நாடக பேரவை தேர்தலுக்கு பிறகு தெரிய வரும் என கூறப்படுகிறது.