கர்நாடகவில் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்த காங்கிரஸ் - மஜத கூட்டணி 117 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடக முதல்வராக குமாரசாமி நாளை (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி ஆளுநரின் அழைப்புக்கு எதிராக இந்து மகாசபை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கை நேற்று(திங்கள்கிழமை) தொடுத்தது.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை இன்று தொடங்கிய உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது.
முன்னதாக, பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவின் எடியூரப்பாவை பெரும்பான்மை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கி ஆட்சி அமைக்க கோரி ஆளுநர் அழைத்தார். இதையடுத்து, எடியூரப்பாவும் முதல்வராக பதவியேற்றார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் அவசர வழக்கை தொடுத்தன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆளுநர் வழங்கிய 15 நாட்கள் அவகாசத்தை நீக்கி அடுத்த நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டப்பேரைவயில் உரை நிகழ்த்தி முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.