தூத்துக்குடி மாவட்டதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நேற்றைய 100-ஆவது நாளில் மாவட்ட ஆட்சியர் நோக்கி பேரணி நடத்துவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணி கூட்டம் எதிர்பாராதவிதமாக வன்முறையாக மாறி, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. போலீஸாரின் இந்த தூப்பாக்கிச் சூட்டில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்விட்டரில் அரச பயங்கரவாதம் என்று தெரிவித்திருந்தார். தற்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ட்விட்டரில் தூத்துக்குடி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
"காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா? தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 1. சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை" என்றார்.