பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை மத்திய அரசால் குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: -
கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு ரூ.15 ஐ சேமிக்கிறது. அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு கூடுதலாக 10 ரூபாய் வரியினை ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்வதன் மூலம் பெறுகிறது.
எனவே பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 25 ரூபாய் வரை அரசால் குறைக்க முடியும், ஆனால் மத்திய அரசு அதை செய்யாமல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் குறைப்பதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகத் தேர்தலுக்கு பிறகு மே 12-ம் தேதி முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இடையிலான கூட்டம் நடைபெற இருப்பதாகக் கூறப்படும் இந்நிலையில் ப சிதம்பரம் தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2016 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் அரசு கலால் வரியை 9 முறை உயர்த்தியது, ஆனால் கடந்த அக்டோபர் மாதம் ஒரே ஒருமுறை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. காலால் வரி குறைப்புக்கு பிறகு, வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகியவற்றில் வெறும் 4 சதவிகிதம் குறைக்கப்பட்டன, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உட்பட மற்ற மாநிலங்கள் இந்த வேண்டுகோளை புறக்கணித்தன.