தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானிசுப்பராயன் முன் வியாழக்கிழமை ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை அரசு தரப்பு உறுதி செய்ய வேண்டும். அந்தப்பகுதியில் இணையதள சேவையை முடக்கி காவல்துறை பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே இணையதள சேவையை முடக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை கண்டறிய மாவட்ட நீதிபதி தலைமையில் சிறப்பு குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும். எனவே இதுதொடர்பாக மனுதாக்கல் செய்துள்ளேன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டார். 

இதனையடுத்து நீதிபதி, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத், இந்த சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களுக்கு தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் காயமடைந்த போலீஸாருக்கு பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மனுவை பரிசீலித்த நீதிபதி, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதால்,தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றால் மட்டுமே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என மனுதாரரிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டும் என வழக்குரைஞர் சூர்யபிரகாசம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜிக்கு கோரிக்கை விடுத்தார். இதன்படி வெள்ளிக்கிழமை (மே 25) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக முறையீடு செய்ய வழக்குரைஞர் சூர்யபிரகாசத்துக்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com