தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாக சகாயம் ஐஏஎஸ் தனது வேதனை வெளிப்படுத்தி உள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவம் மிகுந்த மனவலியையும், மனவேதனையும் அளிப்பதாக சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘தூத்துக்குடி சம்பவத்தால் இரண்டு நாட்களாக எனக்கு எல்லையில்லா அளவிற்கு வேதனை ஏற்பட்டது. இதனை எண்ணிப் பார்க்கையில், நமது தமிழ்ச் சமூகத்தில் வாழ்வாங்கு வாழவேண்டிய 17 முதல் 23 வயதுடைய பிள்ளைகள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருக்கிறார்கள்.
நான் சுதந்திர நாட்டின் குடிமகன். இந்த நாட்டின் சக குடிமக்களின் துயரத்திலும், சோகத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதனடிப்படையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் தமிழ்ச் சமூகத்தின் அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என் தார்மீக ஆதரவு என்றும் உண்டு’ என்று அந்த வீடியோ பதிவில் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.