ஜகர்த்தா: இந்தோனேசியாவின் சம்பா தீவில் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசியாவின் சம்பா தீவில் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பா தீவின் 40 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9.ஆகப் பதிவானது என்றும் அடுத்த 15 நிமிடங்களில் 30 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆகப் பதிவானது என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருள்சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து உடனடியாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சுனாமி, 800-க்கும் மேற்பட்டவர்களின் உயிரை காவு வாங்கியிருக்கிறது.
இன்னும் ஏராளமானோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதையெல்லாம் விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசித்து வரும் சம்பா தீவில் இன்று காலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.