புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி - அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் இடையே கடும் வாக்குவாதம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் இன்று அரசு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்துகொண்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் பேசுகையில், கழிப்பிடம் கட்ட விண்ணப்பம் வழங்கியும் நிதி ஒதுக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார்.
அப்போது, அன்பழகன் பேசுவதை உடனே நிறுத்துமாறு துணை ஆளுநர் கிரண்பேடி கூறினார். அன்பழகன் தொடர்ந்து பேசியதால் எழுந்து சென்று மைக்கை அணைத்த துணை ஆளுநர் கிரண்பேடி. அன்பழகனை வெளியேறுமாறு "பிளிஸ் கோ" என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்பழகன் தொடர்ந்து "நோ" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஒரு கட்டத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை "யு கோ" என்று சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கினார் அன்பழகன். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.