மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிரிகளோடு சேர்ந்து துரோகிளையும் வெல்வோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும், எதிர்த்து நிற்கின்ற எதிரியையும், துரோகியையும் தோற்கடிப்போம். அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அதிமுகவுடன் இருக்கிறார்கள். அவர்கள் ஆர்வத்தோடும், எழுச்சியோடும் துரோகியையும் தோற்கடிக்க சபதம் ஏற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வேட்பாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.