புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.
கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வைச் சந்தித்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று திங்கள்கிழமை (செப்.10) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் இந்த முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள், மணல் லாரிகள் இயக்கப்படவில்லை.
காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ வேன்கள் எதுவும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.