போபால்: காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்திக்கு மிளகாய் எப்படி விளைகிறது என தெரியுமா? என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய நான்கு மாநில சட்டப் பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மிஸோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, இந்த சட்டப் பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதிலும் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெற காங்கிரஸ் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நர்சிங்கர்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசுகையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் தலைநகரான போபாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவர் லால்காட்டி சவுக் இருந்து பாரத ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தின் தசரா மைதானம் அமைந்துள்ள பகுதிக்கு 15 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியாக சென்று மக்களை சந்தித்துள்ளார்.
ஆனால், அவருக்கு வயல்வெளிகளில் மிளகாய் மேல்புறமாகவா அல்லது கீழாகவா எப்படி விளைகின்றது என தெரியுமா? விவசாயம் பற்றி தெரியாதவர் அதை பற்றி அக்கறை கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் ராகுல்ஜி, உங்கள் காங்கிரஸ் அரசாங்கம் விவசாயிகளுக்கு அதிகமாக 18 சதவீத (மத்தியப் பிரதேசத்தில்) வட்டியுடன் கடன்களை வழங்கி உள்ளது. நாங்களோ பூஜ்ய சதவீதத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு விவசாயிகள் வளமான இருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை, ரூ.32,701 கோடி அளவுக்கு பல்வேறு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றார்.