கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்ற இந்திய கடற்படை வீரர் மோசமான வானிலையால் இந்திய பெருங்கடலில் சிக்கி தவித்த அபிலேஷ் டோமியை பிரான்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார். ‘துரியா’ என்று பெயரிடப்பட்ட படகு மூலம் கடந்த 84 நாட்களில் 10 ஆயிரத்து 500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்த டோமி, திடீரென புயலில் சிக்கினார். மோசமான வானிலையுடன் சுமார் 14 அடிக்கு அலைகள் எழுந்து டோமியின் படகை அலைக்கழித்தன. இதனால் படகில் சிக்கிக்கொண்ட அபிலாஷ் டோமிக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், படகை விட்டு அவரால் நகர முடியவில்லை. இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு இந்திய கடற்படைக்கும் நேற்று அவர் தகவல் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து அவரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. அதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஆயிரத்து 900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் டோமியை மீட்க விரைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்திய பெருங்கடலில் சிக்கி தவித்த அபிலேஷ் டோமியை பிரான்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீட்டுள்ளதாகவும், அபிலேஷ் பாதுகாப்பாக உள்ளதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.