இன்று காலை முதலே நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது சோதனை முடிவில் அவரது வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சோதனை முடிந்து வீட்டை விட்டு வெளியில் வந்த சரத்குமார் இது குறித்துப் பேசுகையில்;
இன்று ஆர்.கே நகர் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்கு செல்லவிருந்த நிலையில், தனது ஆதரவுப் பிரச்சாரத்தை தடுக்கும் பொருட்டு, திட்டமிட்டு இப்படி ஒரு சோதனை தன் வீட்டில் நடத்தப் பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து சரத்திடம், வருமான வரிச் சோதனை தொடர்பாக செய்தியாளர்கள், உங்களது வீட்டில் திடீரென இப்படி ஒரு சோதனை ஏன் நிகழ்த்தப் பட்டது? என்ற கேள்வியை எழுப்ப; அதற்கு பதிலளிக்கும் விதமாக, அதைப் பற்றி எனக்குத் தெரியாது, என் வீட்டில் பணம் இருப்பதாக செய்தி வந்ததாகக் கூறி சோதனை செய்தார்கள், என் வீட்டில் அப்படி எதுவும் சிக்கவில்லை என்றதும் சோதனை முடிந்தது. என்னிடம் பணம் எதுவுமில்லை, சோதனைக்கு வந்தவர்கள் கொடுத்து விட்டுப் போனால் நல்லது! என்றார்.