ஏப்ரல் 28 நாளை பாகுபலி- 2 திரைப்படம் வெளியாகிறது. இந்தியா முழுதும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் படத்திற்கான பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை.. பாகுபலி- 2 திரைப்பட வெளியீட்டை ஒட்டி நாளை ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தல, தளபதி ரசிகர்கள் அந்தந்த நடிகர்களின் திரைப்பட வெளியீடன்று எப்படி முட்டிக் கொள்வார்களோ, அதே போல ஆந்திராவிலும் பிரபாஸ் ரசிகர்களுக்கும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் இடையில் முட்டல் மோதல் உண்டாம். பவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அவரது திரைப்படத்திற்கு ரசிகர்கள் வானளவிய கட் அவுட்கள் வைத்து கொண்டாடினார்கள். ஆனால் ஒரே இரவில் அந்த கட் அவுட்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருந்தன. இதைச் செய்தவர்கள் பிரபாஸ் ரசிகர்கள் தான் என்று எண்ணிய பவன் ரசிகர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட அப்போது நிலவரம் கலவரமாகி இருக்கிறது.
இதே போன்றதொரு பதட்ட நிலை இம்முறை பிரபாஸ் நடிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்ல சில உலக நாடுகளையும் கூட திரும்பி பார்க்க வைக்கும் நேர்த்தியில் உருவாக்கப் பட்டிருக்கும் பாகுபலி திரைப்பட வெளியீட்டின் போதும் நேர்ந்து விடக்கூடாது என ஆந்திர காவல்துறை உஷாராக இருக்கிறது. பீமாவரம் பகுதியில் பிரபாஸ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே பட வெளியீடு அன்று அசம்பாவிதங்கள் எதுவும் நேராமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறதாம்.
அந்த உத்தரவின் படி பீமாவரத்தில் நாளை பட பாகுபலி-2 வெளியீடன்று காரணமின்றி ரசிகர்கள் யாரும் குழுவாகவோ மூன்று, நான்கு பேர்களாகவோ பொது இடங்களில் கேளிக்கையில் ஈடுபடவோ, தங்களது தலைவனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பவோ தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.