ராஜஸ்தான், மார்ச் 27, திங்கள் கிழமை: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 28 வயது இளம்பெண் ஒருவர் தனது பண்ணையில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என கிராம மக்களைத் தடுத்திருக்கிறார். அதனால் கிராமத்தினருக்கும் லலிதா என்கிற அந்த இளம்பெண்ணுக்கும் இடையிலான வாய்த் தகராறு முற்றி கடைசியில் கிராமத்தினர் சிலர் அந்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்திய பயங்கரத்துடன் ஓய்ந்திருக்கிறது சண்டை.
ஜோத்பூரின் பிபட் கிராமத்தின் சாலைகளையும், தெருக்களையும் அகலப்படுத்தும் பணிகளைத் தொடங்கும் ஆர்வத்தில் இருந்திருக்கிறார்கள் அக்கிராம நிர்வாகத்தினர். அப்படி சாலை விரிவாக்கம் நடைபெறும் பட்சத்தில் அதற்காக லலிதாவின் பண்ணையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டியதாக இருந்ததாம். இதைக் குறித்து அறிவித்தமையால் கடந்த சனிக்கிழமை அன்றே கிராமத்தினருக்கும், லலிதாவுக்கும் இடையில் வாய்த்தகராறு தொடங்கி இருக்கிறது.
இன்று அந்தத் தகராறு முற்றி சண்டையின் போது இரு தரப்பினிடையிலும் மோசமான சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இதனால் கோபமான கிராம மக்களில் சிலர் லலிதாவின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய லலிதாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி லலிதா இறந்து விட்டார்.
முதலில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் கிராமத்தினர் லலிதாவை உயிரோடு எரித்ததற்கான வழக்காக மட்டுமல்லாமல் தற்போது மரத்தை வெட்டுவதை தடுக்கும் போது இளம்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவிருக்கிறது. என இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இளம்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இந்த வழக்கின் விசாரணை துரிதப்படுத்தப் பட்டிருப்பதாகவும், போதுமான ஆதாரங்கள் கிடைத்ததும் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் எனவும் அம்மாநில காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.