பாராளுமன்றத்தில் திங்கள் அன்று தற்கொலை முயற்சியை தண்டனைக்குரிய குற்றச் செயலாக கருதக் கூடாது எனக் கோரிய புது சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றும் சமூக சுகாதார ஆர்வலர்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப் படுகிறது. ஏனெனில் இந்த சட்டத் திருத்த மசோதாவானது, தற்கொலை முயற்சியை தண்டனைக்குரிய செயலாகக் கருத விடாமல் செய்வதோடு, மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார உரிமைகளையும் கோருகிறது. இந்த சட்டத்திருத்தமானது நிச்சயம் மனநல பாதிப்பால் தற்கொலை முடிவெடுத்து காப்பாற்றப் பட்டு சட்ட நெருக்கடிகளால் அச்சுறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் மனநலப் பாதிப்பு கொண்டவர்களுக்கு மிகப் பெரிய ஆசுவாசத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
உலக சுகாதார நிறுவன கணக்கீட்டின் படி உலக நாடுகளிடையே தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் இந்தியாவுக்கு 12 வது இடமாம். உலக சராசரி தற்கொலை விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்த நிலை வெகு விரைவில் இரு மடங்காகவும் வாய்ப்பிருக்கிறதாம்.
மேலும் இந்த சட்டத் திருத்த மசோதா அடிப்படையில் இனிமேல் மனநோயாளிகள் என்று கருதப் படுவோரில், சிறுவர்களுக்கு தரக்கூடியதான மின் அதிர்வு சிகிச்சையும், ஸ்டெரிலைசேஷன் முறையும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட உள்ளதாம். மன நோயாளிகளை சங்கிலியால் பிணைத்து வைக்கும் கொடுமைக்கும் இந்த மசோதா ஒரு முடிவு கட்டி இருக்கிறது. அனைத்து மனநோயாளிகளுக்கும் அவர்களுக்குப் பொருத்தமான சிகிச்சை முறையை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமைகளையும் இந்த மசோதா அளிக்கிறது. மேலும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் இனி மன நலன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயன்படும் வகையில் தங்களது காப்பீட்டுத் திட்ட சட்ட முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் இந்த மசோதா அறிவுறுத்துகிறது.
இனி வரும் நாட்களில் மன நலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய மெடிக்கல் இன்ஸூரன்ஸ் பாலிஸிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த மசோதா வரையறுக்கிறது. இதைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அந்த மசோதா கூறுகிறது. அதுமட்டுமல்ல மன நலன் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்களின் வாழ்வில் புத்துணர்வை ஏற்படுத்தவென கொணரப்பட்ட இந்த மசோதாவானது மன நோயாளிகளின் சொத்துரிமையையும் மிக அழுத்தமாக உறுதிப் படுத்துவதாகக் கூறிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இந்த புது சட்டத் திருத்த மசோதாவை மனநலன் பாதிக்கப்பட்டவர் நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘மிக முற்போக்கான சட்ட முன்வரைவு மசோதா’ எனக் குறிப்பிட்டுள்ளார்.