ஹரியானா கேடரில் பணிபுரிந்து வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஞாயிறு அன்று தனது முகநூல் கணக்கில்... இந்தியில் தனது உயர் அதிகாரி, தனக்கு தொடர்ந்து அளித்து வரும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறித்து பதிவு செய்திருந்தார்.
முகநூலில் தான் பதிவு செய்திருந்த தகவலை அப்படியே புகாராக்கி சண்டிகர் காவல்நிலையத்துக்கு மின்னஞ்சலும் செய்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது புகாருக்கு எந்தவிதமான பலனும் இல்லை. தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் சரி, மாநிலத்தின் உள்துறை செயலருக்கு எஸ் எம் எஸ் அனுப்பிய போதும் சரி அதற்கான பலன் இந்த விஷயத்தை தான் முகநூலில் பதிவு செய்து விட்டு அச்சு ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய வரையிலும் கூட கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள உயரதிகாரி, அதிகாரப்பூர்வ கோப்புகளில் ஜூனியர் பெண் அதிகாரியான தான் எதிர்ப்புக் கருத்துக்களை எழுதக் கூடாது எனத் தடுக்கும் பொருட்டு இவ்விதமாகத் தன்னிடம் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சம்மந்த்தப்பட்ட அந்த உயரதிகாரியின் பெயரை பொது வெளியில் வெளிப்படையாக தெரிவிப்பது குறித்து தனக்கேதும் ஆட்சேபணை இல்லை என அவர் குறிப்பிட்டிருந்த போதும் தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இந்தி ஊடகங்கள் இருவரது பெயரையும் வெளியிடவில்லை.
ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த வித்யாசமான அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அந்தப் பெண் அதிகாரி;
‘மே 31 ஆம் தேதி தனது அறைக்கு என்னை அழைத்த அந்த உயர் அதிகாரி, அறைக்குள் தான் அழைக்கும் வரை எவரும் வரக்கூடாது என பிற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் என்னிடம், நீ இங்கே எப்படி வேலை செய்ய விரும்புகிறாய்? துறை சார்ந்த அலுவலக வேலையைச் செய்ய விரும்புகிறாயா? அல்லது பொழுது போக்காக வேலை செய்ய விரும்புகிறாயா? என்றும் கேட்டார். அதோடு அதிகாரப் பூர்வ அலுவலக கோப்புகளில் கையெழுத்திடும் போதும், குறிப்புகள் எழுதும் போதும் எதிர்ப்புக் கருத்துகளை அதில் பதிவு செய்யக் கூடாது எனக் கூறினார். அவர் எனக்கு வேலை செய்யக் கற்றுத்தரும் விதத்தைப் பார்த்தால் புதுமணமகளுக்கு புகுந்த வீட்டில் வேலை கற்றுத்தருவது போல இருந்தது. அதனால் தான் அவரது நடத்தை எனக்கு ஒழுக்கக் கேடானது போலத் தோன்றியது.’ - என விவரித்திருந்தார்.
அது மட்டுமல்ல, பிறகு ஜுன் 6 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அந்த உயர் அதிகாரி அவரது அலுவலகத்துக்கு அழைத்தார், நான் சென்று அவரது நாற்காலிக்கு எதிரில் அமர்ந்து 7.39 மணி வரை காத்திருந்தேன். பிறகு என்னை எழுந்து அவரது அருகில் வரச்சொன்னார். கணினியில் எப்படிப் பணிபுரிவது எனக் கற்றுத்தருவதாகச் சொல்லி அவரது அருகில் அமரச் சொன்னார். நான் அவரது அருகில் அமர்ந்த போது, மேலும் அருகில் நெருங்கி வந்து அமருமாறு கூறினார். அப்போது மேலும் நெருங்கி அமர்ந்து என்னைத் தொட முயன்றார். இத்தகைய நடவடிக்கைகள் எனக்கு ஒழுக்கக் கேடானதாகத் தோன்றியதால் நான் புகார் அளித்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பற்றி சம்மந்த்தப் பட்ட உயரதிகாரியிடம் விசாரித்ததில், அவர் தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தார். நான் ஒரு உயரதிகாரி என்ற முறையில், எனக்குக் கீழே பணிபுரியும் ஜூனியர் அதிகாரிகளுக்கு வேலை கற்றுத் தருவது எனது கடமை. அதைத்தான் நான் செய்தேன். அந்த இளம் பெண் அதிகாரி குறிப்பிடுவது போல இங்கே எதுவும் நடக்கவில்லை. அதோடு அலுவலகக் கோப்புகளில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்வதை அந்தப் பெண் அதிகாரி தொடர்ந்து செய்து வந்தார். அப்படிச் செய்யக்கூடாது என நான் அறிவுறுத்தினேன். ஒரு மேலதிகாரியாக இதுவும் எனது கடமை. அலுவலக நேரத்தில் பெண் அதிகாரிகள் பணிபுரியும் சூழலில் தனியாக இருக்கக் கூடிய சந்தர்பங்களை நான் பெரும்பாலும் நிராகரித்து விடுவேன். எப்போதாவது அப்படி நேர்ந்திருந்தால் அது வெகு குறைவான சமயங்களிலாக மட்டுமே இருந்திருக்கலாம். எனத் தெரிவித்திருக்கிறார்.
பெண் அதிகாரியின் புகார் குறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உண்மையில் யார் மீது தவறு என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும் என்கிறது ஹரியானா காவல்துறை.
உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்... பிரபல செலிபிரிட்டி செஃப் ஆண்ட்டனி போர்டைன் தற்கொலை!
624 / 625 மதிப்பெண் பெற்ற மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து சென்ட்டம் பெற்ற அதிசயம்!
முன்னாள் நீதிபதி கர்ணனின் ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ கொடி அறிமுகம்!
பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது வெட்டி வேலை: மேனகா காந்தி!
லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! சொன்னவர்களும், செய்து காட்டியவர்களும்!