மருத்துவமனையில் இருந்து ராஜ்பவன் திரும்பினார் ஆளுநர்! 7 மணிக்கு பணிக்கு வர போலீஸாருக்கு டிஜிபி உத்தரவு!!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா உடல் நிலை குறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விவரம் கேட்டறிந்த பிறகு ராஜ்பவன் திரும்பினார்.
கடந்த 78 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மும்பையில் இருந்த தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் விமானம் மூலம் அவசரமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அப்பல்லோ மருத்துவமனை சென்ற அவர், மருத்துவர்களுடனும் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியுடனும் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரித்தார். சுமார் 5 நிமிட நேரம் அங்கு இருந்த ஆளுநர், பிறகு அங்கிருந்து ராஜ்பவன் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து உயர்மட்ட காவல் துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார். தமிழகக் காவல் துறையில் உள்ள அனைத்து போலீஸாரும் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணிக்குத் திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.