சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து, 15 நீதிபதிகளும் விரைவில் பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் மொத்தம் 39 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 36 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிறப்பாக பணியாற்றும் 19 வழக்கறிஞர்கள், 11 மாவட்ட நீதிபதிகள் என 30 பேர் பட்டியலை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம், கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தது.
பட்டியலை பரிசீலித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 24 பேரின் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முதல்கட்டமாக வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியம், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், நிஷாபானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியன், டாக்டர் அனிடா சுமந்த், மாவட்ட நீதிதிகள் எஸ்.பாஸ்கரன், பஷீர் அகமது, ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன், டீக்காராமன், கார்த்திகேயன் ஆகிய 15 பேரின் பெயரை ஜனாதிபதி ஒப்புதல் தந்தார்.