சொத்து மதிப்பு, சமூக அங்கீகாரம், தொழில் முன்னேற்றம், சாதனை, சேவை, உள்ளிட்ட பல திறமைகளின் அடிப்படையில் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு இப்பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் சான்ஸலர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகி உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்., பேஸ்புக் CEO ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், Ge நிறுவனத்தின் CEO மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்19-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்திலும், ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளார்கள்.
ICICI தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 32-வது இடத்திலும், HCL கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா 71-வது இடத்திலும் உள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 91-வது இடத்தில் உள்ளார்.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தைப் பிடித்துள்ளார்.