சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு இரு தினங்களுக்கு முன் மர்ம தொலைபேசி அழைப்பின் மூலம் மிரட்டல் வந்தது. இதனை அடுத்து விமான நிலையத்தில் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலையம் முழுவதும் சோதனை முடுக்கப்பட்டது.
அந்த மர்ம அழைப்பில் எந்ந நொடியும் குண்டு வெடிக்கலாம் என்று மிரட்டப்பட்டிருந்தபடியால் காவல்துறையினர் விரைந்து ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மோப்ப நாய் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர ஆய்வுக்குப் பின் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இத்தகைய பொய்யான தகவல்களை பரப்பி, தொலைபேசி மிரட்டலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரவணன் மற்றும் அவரது நண்பர் திபானென்ட் என்பவர்களை கைது செய்துள்ளனர். அந்த இருவரிடம் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ட்விட்டர் செய்தியில் வெடிகுண்டு செய்தி புரளியானது, பயணிகள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.