கனரா வங்கி, "மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்' என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஆண்டுதோறும், பெண்களுக்கான இலவச சுயதொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது. இது குறித்து கனரா வங்கியின் அலுவலரும், மகளிர் அமைப்பின் பொறுப்பாளருமான சுதாஷா கூறியதாவது:
"கனரா வங்கி வீட்டிலிருக்கும் பெண்கள் ஏதாவது ஒரு சுய தொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வழிவகை செய்து தருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருக்கிறது. டிசம்பர் 1 முதல் 21 ஆம் தேதி வரை வார நாட்களில் மட்டும் சென்னை, கே.கே. நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் நடக்கிறது. இந்த இலவச பயிற்சியில் கனரா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
கணக்கு இல்லாதவர்கள், புதிய கணக்கை உருவாக்கிக் கொண்டு கலந்து கொள்ளலாம். இந்த இலவச பயிற்சியின் மூலம் தையல், பேப்பர் பேக், ஊறுகாய் தயாரிப்பு, மசாலா பொருள்கள் தயாரிப்பு, ஜுஸ் வகைகள் தயாரிப்பு, ஜூட் பேக் தயாரிப்பு போன்ற 20க்கும் மேற்பட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.
மேலும், "கேன் பசார்' என்னும் திட்டத்தின் மூலம் சுய தொழில் செய்து வரும் பெண்கள், தாங்கள் உருவாக்கும் பொருள்களை சந்தைப்படுத்தவும் கனரா வங்கிகளிலேயே இலவச கண்காட்சி கூடத்தையும் உருவாக்கி தருகிறோம். இதனை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெற ஒரு வாய்ப்பு கிடைக்கிறது'' என்றார்.