தமிழில் ‘தல’ அஜித் போலத்தான் தெலுங்கில் பவன் கல்யாண். ஏனெனில், டோலிவுட்டின் அஷ்டாவதானியான, அவருக்குச் சேர்ந்திருக்கும் ரசிகர் பட்டாளமும், பாசத்தில் தானாகச் சேர்ந்த கூட்டம் என்று டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அரசியலில் அண்ணன் சிரஞ்சீவியையே அசால்ட்டாகத் திரும்பிப் பார்த்து விட்டு ‘ஜன சேனா பார்ட்டி’ ஆரம்பித்து பட படவென்று முன்னேறிப் போய்க் கொண்டிருக்கும் பவனுக்கு அக்கட பூமியில் ரசிகர் பட்டாளத்துக்கு ஒரு குறையும் இல்லை. பவன் ஹிட் கொடுக்கிறாரோ இல்லையோ அவரது படம் ஷுட்டிங் முடிந்து வெளிவந்தாலே, அது அவரது ரசிகர்களுக்கு திருவிழாக் கொண்டாட்டம் தான். அந்த வகையில் இனி வரப்போவது பவனுக்கு 25 வது படம்.
தெலுங்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அந்தப் படத்துக்கு பெயர் எதுவும் இன்னும் இடப்படவில்லை. எனினும் இயக்கப் போவது திரிவிக்ரம் என முடிவாகியுள்ளது. முன்னரே ‘ஜல்ஸா’ மற்றும் ‘அந்தரிண்டிகி தாரேதி’ படங்கள் மூலமாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த ஜோடியின் மூன்றாவது படமாக இது அமையப் போகிறது.
ஹைதராபாத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி பவன் கல்யாண், அனு இம்மானுவேல் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எஸ்.ராதாகிருஷ்ணா தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று ஸ்டுடியோ வட்டாரத்தில் கூறப்படுகிறது.