சில திரைப்படங்களில் கண்டிருப்பீர்கள்; காவல் நிலையத்துக்கு பதட்டத்துடன் ஒருவர் புகார் அளிக்க ஓடி வருவார், புகார் என்னவென்று சொல்லி முடிப்பதற்குள்ளாக சம்பவம் நடந்த இடத்தை விசாரிக்கும் காவல்துறையினர். இந்த இடம் இந்த காவல் சரக எல்லைக்குள் வரவில்லை. நீங்கள் குற்றம் நடந்த இடம் எந்த காவல் சரக எல்லைக்குள் வருகிறதோ அங்கே சென்று புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கடுப்படிப்பார்கள். ஆனால் குற்றங்கள் என்ன ஒரே இடத்திலா நடக்கின்றன? உடனே நாம் எந்த காவல் சரக எல்லைக்குட்பட்டவர்கள் என மனனம் செய்து கட கடவென ஒப்பிக்க! குற்றங்கள் என்னவோ அது பாட்டுக்கு பெரு நகரங்களில் எங்கு வேண்டுமானாலும் திடீரென நடந்து முடிந்து விடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் நிலை தான் பரிதாபம்!
அதிலும் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் எனில் அவர்கள் அனுபவிக்கும் தொல்லைகளைக் குறித்துச் சொல்லவே வேண்டாம். எந்த காவல் சரகம் என்பதை அறிவதற்குள்ளாக இங்கே... அங்கே என அலைந்து அலைக்கழிந்து போதும், போதுமென்றாகி விடும் அவர்களுக்கு. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக பெங்களூரு காவல்துறையினர், தொழில்நுட்ப வசதிகளின் துணை கொண்டு புது அலைபேசிச் செயலி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்தச் செயலியை அலைபேசியில் நிறுவிக் கொண்டால் போதும். நாம் எந்த காவல் சரக எல்லையில் இருக்கிறோம் என்பதை அந்தச் செயலி மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியுமாம். ஆனால் இந்த செயலியைப் பயன்படுத்துவதில் அலைபேசியாளர்களுக்கு ஒரு சின்னத் தடங்கல், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் செயலி ஆண்ட்ராய்டு வெர்சன் அலைபேசிகளில் மட்டுமே நிறுவும் வகையில் தயார் நிலையில் உள்ளது . ஆனால் ஆப்பிள் அலைபேசியாளர்களுக்குத் தேவையான ios வெர்சன் செயலிகளை உருவாக்கும் வேலை துரித கதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு வெர்சன்களிலும் ‘know your police station' செயலிகள் தயாரானதும் பயன்பாட்டில் விடப்படும் என பெங்களூரு காவல்துறை உயரதிகாரிகள் வட்டம் தெரிவித்துள்ளது.