தென் கரோலினாவைச் சேர்ந்த மில்ட்ரெட் பவர்ஸ் எனும் மூதாட்டிக்கு வயது 103. தனது ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியத்தை சமீபத்தில் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டார் மில்ட்ரெட்.
தினமும் மாலை நான்கு மணிக்கு மில்ட்ரெட் அம்மையார் தவறாமல் குளிர வைத்த பீரை பருகி வருகிறார். இதுவே தன் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்றும் நம்புகிறார். இதை மருத்துவரே தனக்குப் பரிந்துரைத்ததாகவும் கூறிவருகிறார் இந்தப் பாட்டி. ஆனால் ஒரு பீருக்கு மேல் குடிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்து வருகிறார்.
உலகம் தொடங்கிய நாள் முதல் மனிதர்களின் ஆசை நீண்ட ஆயுள். ஆனால் மில்ட்ரெட்டுக்கு அவர் எதிர்பார்க்காமலேயே ஆயுள் கெட்டியாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் தனது 102-வது வயதை சிறப்பாக பீர் அருந்திக் கொண்டாடிய இந்த மூதாட்டி தனது ஆரோக்கியத்துகாக ஜிம் சென்றதில்லை, டயட் இருந்ததில்லை. அவர் நம்பியது எல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். அது ஒரு கோப்பை பீர். எது எப்படி போனாலும் தினந்தோறும் தனது பீர் அருந்தும் சடங்கை மட்டும் அவர் நிறுத்துவதில்லை. தமது வாழ்நாள் முழுவதும் இதனைக் கடைபிடித்து வருகிறாராம். இதுவே அவரது நீண்ட ஆயுளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார்.
'சிலருக்கு காபி, டீ குடிப்பது பிடிக்காது. அவரவருக்கு இஷ்டமானதை குடிக்க வேண்டும். எனக்கு பீர்தான் பிடிக்கும் அதுவும் டாக்டரிடம் கேட்டுவிட்டுத் தான் குடிக்க ஆரம்பித்தேன். இப்ப என்ன நஷ்டம். நான் ரொம்ப ஆரோக்கியமாகவே இருக்கிறேன்’ என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் மில்ட்ரெட். அளவுக்கு மிஞ்சினால் பீரும் நஞ்சு என்பதை புரிந்தவர் என்பதால், ஒரு பின்ட் பீருடன் நிறுத்திக் கொள்வாராம். இந்தப் பழக்கத்தினால் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றார்கள் அவரது சுற்றத்தினர்.
மில்ட்ரெட்டின் இந்த பீர் பழக்க பேட்டி, அது வெளிவந்த சமயத்தில் பரபரப்பானது. அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கிட்டத்தட்ட ஆறுமாதம் ஆகிவிட்ட நிலையில், அவரது அடுத்த (பீர்!) பேட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்.