அம்ராபலி இந்தியாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தில் அதன் நிறுவனர் அனில் குமார் ஷர்மாவுடன் இணைந்து, தோனியின் மனைவி சாக்ஷிக்கு 25 % பங்குகள் உண்டு.
இந்த நட்பின் அடிப்படையில் தான் தோனி அம்ராபலி விளம்வரங்களில் பிராண்ட் அம்பாஸிடராகத் தோன்றி வந்தார். அம்ராபலியில் வீடு வாங்க ஒப்பந்தம் செய்து கொண்ட சுமார் 4000 வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் அந்நிறுவனம் வீடுகளை ஒப்படைக்காத காரணத்தால் பலருக்கும் அதன் மீது கசப்புணர்வு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அதன் விளம்பரங்களில் தோன்றி வந்த தோனியை இணையதளத்தில் மீம்ஸ் மற்றும் ட்ரால்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கடும் விமர்ச்சனம் செய்யத் தொடங்கினர். இதனால் தோனி அந்த விளம்பர ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் விலகிக் கொண்டார். இது பழைய கதை.
இப்போது அம்ராபலியின் பங்குதாரர் என்ற முறையில் தோனி மனைவி சாக்ஷி மீது மேற்கு டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளிக்க, அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி தோனி மனைவி சாக்ஷிக்கு டெல்லி திஸ் ஹஸாரி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.