நாம் உடல் நலத்திற்கும், உடல் ஊட்டத்திற்கும் உணவு சாப்பிடாமல், நாக்கு சுவைக்காகத் தான் உணவை உட்கொண்டு வருகிறோம். அதனால் பல சிக்கலுக்கு உள்ளாகிறோம். துரித உணவை உட்கொண்டால் உடல் உபாதை ஏற்படும் என்று தெரிந்தும், நாக்கு சுவைக்காக உட்கொண்டுவிட்டு உடல் நலக் கோளாறுகளுக்கு உள்ளாகின்றோம். அதற்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்கு மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவமனையில் உள்ள ஊட்டச்சத்து உணவு ஆலோசகர், எந்தெந்த ஊட்டச் சத்து உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்குவார்.
அதே சமயம், கல்வியறிவு மிகுந்துள்ள இக்காலத்தில், உடல் நலத்தின் மீது அக்கறையும், விழிப்புணர்வும் உள்ளவர்கள் இன்னொருபுறத்தில் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். உடல் நலத்துடன் வாழ என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள, ஊட்டச் சத்து உணவு ஆலோசகர்களை அணுகுகிறார்கள்.
தற்போது ஊட்டச்சத்து உணவு ஆலோசகர் என்ற பணி பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளில் உள்ளது. தனிப்பட்ட முறையில் அந்தப் பணியை மேற்கொண்டால் மக்கள் அதிக அளவில் ஆலோசனை பெற வருவார்கள். அதற்கு ஊட்டச்சத்து உணவு ஆலோசகராவதற்கான கல்வியைப் பயில வேண்டும். இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. அதோடு ஆன்லைன் மூலமும் பல்வேறு நிறுவனங்கள் இதனைப் பயிற்றுவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு :
http://ninindia.org
http://www.ignou.ac.in
http://www.shawacademy.com
http://www.vlccinstitute.com
http://www.thelivingcentre.com
- எம்.அருண்குமார்