கட்டடக் கலை மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதேபோன்று கட்டுமானத் துறையில் சிறந்து விளங்குவோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கட்டுமானத் தொழில் அகாதெமி சார்பில் கட்டுமானப் பொறியியல் கட்டடக் கலை மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரைப் போட்டிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றன.
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்களின் புதுமையான ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடக்சர் பேராசிரியை சீத்தாலட்சுமி, கர்னல் பொ.நல்லதம்பி, மகேந்திர பிரசாத், கண்ணன், கல்வியாளர் தமிழ்மணி, ரவிசங்கர், சிந்துபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கட்டுமானத் துறையினருக்கு... கட்டுமானத் தொழில் அகாதெமி சார்பில் இந்தத் துறையில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2016 -ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு இத்துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அந்த அமைப்பு வரவேற்றுள்ளது.
கட்டடக் கலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கட்டுமானத் துறையில் சிறந்து விளங்குவோருக்கும் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் விழாவில் பரிசு, விருதுகள் வழங்கப்பட உள்ளன.