பஞ்ச சமஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும்.
1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல் "புண்ட்ர சம்ஸ்காரம்' ஆகும்.
3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல் நாம சம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் "மந்திரசம்ஸ்காரம்' ஆகும்.
5) எம்பெருமானின் மூர்த்தியை, அமைத்துக் கொடுத்து யஜ்ஞம் என்னும் திருவாராதணை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல் யாகசம்ஸ்காரம் ஆகும்.
இவை அனைத்தும் ஒரு நன்னாளில், ஒரே வேளையில் நடத்தப்படும். பெரிய நம்பிகள் ராமாநுஜருக்கு "பஞ்ச ஸம்ஸ்காரம்' (சமாச்ரயணம்) செய்து, ராமாநுஜர் என்ற பெயரையும் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.