இன்று தூர்வாஷ்டமி. அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக இன்று கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
இந்த தூர்வாஷ்டமி விரதத்தை யார் யார் கடைப்பிடிக்கலாம்?
தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.
வழிபட வேண்டிய முறை
காலையில் நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, சுத்தமான முறையில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு, விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர், சுத்தமான இடத்தில் அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கலாம் அல்லது பலகையின்மேல் அருகம்புல்லை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு நமஸ்கரிக்க வேண்டும். பலகையின் மேல் நமக்கு இஷ்ட தெய்வத்தை வைத்து பூஜிக்கலாம்.
சொல்ல வேண்டிய ஸ்லோகம்
"ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்" (நிர்ணய ஸிந்து)
என்று சொல்லி பூஜிக்க வேண்டும்
கிடைக்கும் நன்மைகள்
இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதனால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும், குறைவிலா உணவு, நீர், ஆடை கிடைப்பதற்கும், நீண்ட ஆயுள், புத்திமான்களான வீரர்களான புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.