பொதுவாக சிவாலயங்களில் விழாக்காலங்களில் அல்லது விசேஷ தினங்களில் சுவாமி, அம்பாள் உற்ஸவ திருமேனிகள் ரிஷப வாகனத்தில் காட்சி தருவதைப் பார்த்திருப்போம். ஆனால், நிரந்தரமாக ரிஷபாரூடராய் அதுவும் கற்திருமேனியில் காட்சி தரும் ஆச்சரியமான தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருலோக்கி. அப்படிப்பட்ட திருதலத்தில் தான் குருபகவான் பேசும் திறனை மீண்டும் பெற்றார்.
ஒரு முறை தேவ குருவான பிரகஸ்பதி ஒரு சாபத்தினால் பேசும் திறனை இழந்தார். நிவர்த்தி வேண்டி திருவிடைமருதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை வழிபட்டார். இறையருள்படி திருவிடைமருதூருக்கு ஈசான்ய திசையில் அமைந்துள்ள திரைலோக்கி தலத்துக்கு வந்தார். அங்குள்ள சுந்தரேஸ்வரரை வேண்டி தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் கீழ் தவம் செய்தார்.
ஒரு மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் தேவர்களும், பூத கணங்களும் புடை சூழ ரிஷப வாகனத்தில் சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை ஆலிங்கனம் செய்தவாறு காட்சி தந்தார். அப்போது குரு பகவான் பாப விமோசனம் பெற்றார். இவ்வாலயத்தில் ரிஷபாரூடருக்கு எதிரில் அஞ்சலி செய்தவாறு இருக்கும் குருவின் சிலையைக் காணலாம்.
தேவகுரு பிரகஸ்பதி, ரதி தேவி, பிருகு முனிவர், சுகேது, தருமன், கருவூர்த் தேவர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. இந்த தலத்தில் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு குருதோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. மேலும், விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் நடைபெறுகிறது.
இத்தலத்தில் குரு பகவான் பேச்சுத் திறன் பெற்றதால், உரிய காலத்தில் சரியாக பேச்சு வராத குழந்தைகளுக்கு இத்தலத்து இறைவனுக்கு நடைபெறும் பிரதோஷ வைபவத்தில் ரிஷாபாரூடருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேனை அருந்த கொடுத்தால் நிவர்த்தி கிடைக்கும் என்பர்.