திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் வேங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தாயார் பத்மாவதி அம்மையார்.
வழக்கமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு தேர்வு விடுமுறை, அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வருவதால் 2018 ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஆதார் இருந்தால் மட்டுமே விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும், தங்களின் ஆதார் அட்டையைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.