பழனி தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் உங்கள் கவனத்திற்கு.....

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
பழனி தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் உங்கள் கவனத்திற்கு.....

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்தலத்து முருகப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழனி முருகப்பெருமான் கோயிலை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய சில தகவல்கள்.....

• தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்களை மட்டுமே உபயோகிக்கப்படுத்துகின்றன. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகியவையாகும். பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவற்றில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது அடி முதல், முடி வரை முழு அபிஷேகமும் சந்தனமும், பன்னீரும் மட்டுமே. இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற ஒரு பிரசாதம். அது கிடைப்பது மிகவும் அரிதானது.

• ஒரு நாளைக்கு ஆறு முறை சுவாமி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகம் ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

• இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கு இடையில் ஒரு பொட்டு அளவுக்குச் சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தனக் காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டுள்ளது.

• தண்டாயுதபாணியின் விக்ரகம் மிகுந்த சூடானதாக இருக்குமாம். இதனால், இரவு முழுவதும் அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்படுமாம். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

• தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும். போகரின் கை வண்ணம் இதில் தெள்ள தெளிவுடன் தெரிய வரும். அந்தச் சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி இருக்கும். இந்தச் சிலையை செய்யப் போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் ஒன்பது வருடம் ஆகும்.

• அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்குப் பின்னரே போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியை எடுத்துள்ளார். இதற்காக 4,000-த்திற்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக தகவல்கள் உண்டு.

• போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

• கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்தக் கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான்.

• தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரைத் தரிசிக்க வலது பக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தைத் தரிசிக்க இயலாது. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியிலும், மற்றொன்று போகர் சமாதியின் மேல். இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக
தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு பல்வேறு அதிசயங்களைக் கொண்டது பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆகும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகவும் மக்கள் கூட்டம் அதிகளவில் வந்து, முருகனை வேண்டி பலன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com