திருவெண்பாக்கத்தில் கோல் பெற்று அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். காஞ்சிபுரம் அடைந்தார். "கச்சி ஏகம்பனே! கண்ணளிக்க மாட்டாயா? உன்னைக் கண்டு தரிசிக்கக் கண்ணளிக்க மாட்டாயா?'' என்று கதறியழுதார். "கடையனேன் என் பிழை பொறுப்பாய்'' என்று விண்ணப்பம் செய்தார். அவரின் வேண்டுகோள் கேட்டு அவரின் இடது கண்ணில் பார்வை அருளினார் பரம்பொருள்.
இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்.
இறைவி - ஏலவார் குழலி.
ஒரு கண்ணில் பார்வை கிட்டியவுடன், பரமனைப் பார்த்த மகிழ்ச்சியில் பதிகம் பாடிப் பரவினார் சுந்தரர்.
காஞ்சிபுரத்தில் கண் பார்வை பெற்று சுந்தரர் பாடிய பதிகம்
"ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே.''
காஞ்சிபுரம் தலத்தினைச் சென்றடையும் வழி:
சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.