திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் அஷ்டபந்தன மருந்து சேதமானது குறித்து பக்தர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது அனைத்து மூலவர்களைச் சுற்றிலும் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.
இந்த மருந்து சாத்தப்படும்போது மூலவர் சிலையைச் சுற்றி பக்தர்கள் தங்கம், வைரம், வைடூரியம், விலை உயர்ந்த முத்து, பவளம் உள்ளிட்ட கற்களை வைப்பது வழக்கம். அவற்றின் மீது அஷ்டபந்தன மருந்தை வைத்து அழுத்தம் கொடுத்து சாத்தப்படும்.
கும்பாபிஷேகம் முடிந்து ஓரிரு மாதத்தில் லிங்கத்திற்கு சாத்தப்பட்ட அஷ்டபந்தன மருந்து சேதமானது. இதுகுறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தனி நபராக பக்தர் போல் வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் அப்போது மற்ற சந்நதிகளில் உள்ள சுவாமிகளுக்கு மருந்து சாற்றப்பட்டு உள்ளதை வெளியில் இருந்து பார்வையிட்டார். பின்னர், அவர் பார்வையிட்டது குறித்துப் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகே கோயில் இணை ஆணையர் ஜெகன்நானுக்கு தெரிய வந்தது.
இதுதொடர்பாக தொலைபேசியில் தொடர்கொண்ட போது, சுவாமி தரிசனம் மட்டும் செய்தேன் அஷ்டபந்தன மருந்து குறித்து ஆய்வு செய்ய வரவில்லை. பக்தர்கள் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்றார்.