காவிரி மகா புஷ்கரம் விழாவானது, 12 குருப் பெயர்ச்சிகளை கடந்து 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு மகாபுஷ்கரம் விழா மயிலாடுதுறையில் சிறப்பாக கொண்டப்பட்டது. மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.
ஐப்பசி மாதத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று நடைபெற்றது. அதற்கு மறுநாள், கார்த்திகை முதல் நாள் முடவன் முழுக்கு உற்சவம் நடைபெறுகிறது. எதற்காக இந்த முடவன் முழுக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது, எதற்காக இந்தப் பெயர் வந்தது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஒருநாள் ஒரு கால், கை ஊனமுற்றவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த இறைபக்தி கொண்டவன். ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும் காவேரியில் சங்கமிக்கின்றன என்றும், அதில் நீராடினால் எல்லாப் பாவங்களும் விலகிவிடும் என்றும் அவன் கேள்விப்பட்டான்.
என்ன பாவம் செய்தோமோ இப்பிறவில் வருந்துகிறோம். அடுத்த பிறவியிலாவது நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்று எண்ணி, மயிலாடுதுறை நோக்கி மிகவும் சிரமப்பட்டு சென்று அடைந்தான்.
அவன் மயிலாடுதுறை காவேரிக் கட்டத்தை அடைந்தபோது ஐப்பசி முடிந்து கார்த்திகை முதல் நாள் பிறந்துவிட்டது. அவன் மிகவும் மனம் வெதும்பி இறைவனை நினைத்துக் கண்ணீர் வடித்தான்.
அப்போது சிவபெருமான் அசரீரியாக கவலை வேண்டாம் நீ நதியில் சென்று நீராடு. ஐப்பசியில் நீராடிய பயனைப்பெறுவாய் என்றார். அதைக்கேட்டு சிலிர்த்த அவன் இறைவனைத் துதித்தபடி காவேரியில் மூழ்கி எழுந்தபோது அவன் ஊனம் நீங்கி முழு மனிதனாகப் பொலிவுடன் திகழ்ந்தான்.
பின்னர், மனமுருக சிவபெருமானை வேண்ட அவனுக்குக் காட்சியளித்தார் சிவபெருமான். அவன் கேட்டுக்கொண்டபடி கார்த்திகை முதல் நாளில் நீராடினாலும் ஐப்பசியில் நீராடிய பலனை அனைவரும் பெறலாம் என்று அருளினார். அன்று முதல் முடவன் முழுக்கு உற்சவம் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.