பகவான் மஹாவிஷ்ணு வராஹ அவதாரத்தின் போது பூமாதேவியை மணந்து கொண்டார். பூமாதேவியின் அம்சமே சத்தியபாமா. அப்போது அவர்கள் இருவருக்கும் தோன்றிய மகன் பெயர் பௌமன். அவன் தவம் செய்து பல வரம் பெற்று அசுர குணங்களால் நிரம்பியவனாக எல்லோரையும் துன்புறுத்தியதால் "நரகாசுரன்' என்றழைக்கப் பெற்றான்.
இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்பார் கம்பர். அசுர குணங்கள் நிரம்பிய நரகாசுரனை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருவுளம் கொண்டார். அதற்கு அவன் தாய் சத்யபாமாவே தேரோட்டிச் சென்றாள்.
தற்போதைய அசாம் மாநிலத்தில் பிராக்ஜோதிலிம் என்னும் நகரில் அவன் ஆட்சி செய்தான். தனக்குத் தன் தாயைத்தவிர வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் வாங்கியிருந்தான். அவனுடன் பகவான் சண்டையிடும்போது அவனது கதாயுதம் பகவான் நெற்றியில் பட்டு தேரிலேயே மயங்கி விழுந்தார். உடனே சத்யபாமா வெகுண்டு எழுந்தார்.
வில்லையும் அம்பையும் தானே எடுத்துக்கொண்டு நரகாசுரனுடன் போரிட்டு அவனை அழித்தார். அந்த நாளே ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியாகும். நரகாசுரனை வதம் செய்ததால் அன்றைய தினம் நரக சதுர்த்தசி என வழங்கப்பெற்றது.
அவன் மரணத்தறுவாயில்தான் சத்யபாமாவுக்கு இவன் தன் மகன் என்ற உண்மை புரிந்தது. ஆயினும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலை அல்லவா இது? என உணர்ந்து பகவானிடம் வரம் வேண்டினாள். அதுவே உலக மக்களுக்கு நரகாசுரன் வதமானது ஒரு விழாவாக அமைந்தது.
தன் மகனே இறந்தாலும் கூட பகவானிடம் அந்தத்தாய் உலகமக்களுக்காக வரம் கேட்டாள். அதாவது வருடந்தோறும் அன்றைய தினத்தில் மக்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பகிர்ந்து உண்டு, இறை வழிபாடு செய்து, ஆனந்தமாக வாழ வேண்டும் என வரம் கேட்டாள். அதற்கு பகவானும் புன்னகையுடன் சம்மதித்தார்.
அன்றில் இருந்து, இந்தியா முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்பெறும் பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. ராமேஸ்வரம் தொடங்கி இமயம் வரை எல்லோரும் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புக்களை உண்டு பெரியவர்களை வணங்கி விமரிசையாக கொண்டாடுகின்றோம்.