விரதம் என்பதை பண்டைய காலத்தில் நமது முன்னோர் உபவாசம் என்று சொல்வார்கள். உபவாசம் இருப்பதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது.
மாதம் ஒருமுறை உபவாசம் இருப்பதால் நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். விரதம் இருப்பதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. ஆகவே, விரதம் இருக்கும் போது என்ன விதிமுறைகளை கடைப்பிடிக்கலாம் என்று பார்ப்போம்.
விரதங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான சில விதிமுறைகள் இருக்கும். விரதத்திற்கு முதல் நாளே வீட்டினை சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று.
• விரத நாளன்று அதிகாலை எழுந்து நீராடி காலையும், மாலையும் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி, விபூதி பூசி வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
• பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற்கொள்ள வேண்டும்.
• குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
• குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்துவிட்டால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
• விரதம் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனை தராது.
• விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக்கூடாது.
• விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது சிந்தனையைச் செலுத்த வேண்டும்.
• விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூடத் தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.