தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ஹைலைட். மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப்பெண்ணை நேராக நோக்கி, அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட, மாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது.

கல்யாணம் என்பது பெண்களுக்குத்தான் சிறப்பைத் தரும். பார்வதி கல்யாணம், லக்ஷ்மி கல்யாணம், கௌரீ கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், ருக்மிணி கல்யாணம் என்று பெண்கள் பெயரில் இணைந்து விளங்கிவருவது கல்யாணமாகும். அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், மாங்கல்யம் (தாலி) அணிவதாகும்.

திருமாங்கல்ய சரடு எனும் தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு இடுவதுதான் தாலி கட்டுதல். இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாகப் போடப்படுவது முதல் முடிச்சு. முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்துக்கு வருகை தந்தவர்களின் சாட்சியாகக் போடப்படுவது மூன்றாம் முடிச்சு. அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு.

விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாகத் திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்பப் பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

கூறை உடுத்தி வந்த மணமகள், மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்தத்தில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து, குருவான புரோஹிதர் ஆசிர்வதித்துக் கொடுக்கும் மாங்கல்யத்தை இருகரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க, மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம் “மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா, கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவச ரதசதம்”. அதாவது, ‘ஓம்! பாக்கியவதியே, நான் சீரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக’ என்று அர்த்தம்.

திருமணத்தின்போது மணமகன், மணமகளை தன் உரிமை மனைவியாக அடையாளப்படுத்த அணிகின்ற ஒரு ஆபரணமே “மாங்கல்யம்” எனும் தாலியாகும். தாலி அணிந்த பெண்ணானவள் விவாகமாகியவள் என்பதையும், கணவன் உயிருடன் இருப்பதையும் உறுதி செய்வதோடு, அவள் ஒரு ‘‘சுமங்கலி” என்பதையும் காட்டி நிற்கின்றது. ஒரு ஆடவன், தாலி அணிந்த பெண்ணைக் காணும்போது, இவள் திருமணமான ஒரு பெண் என்று விலகிப்போவான்.

இதனால்தான் "தாலி பெண்ணுக்கு வேலி" எனும் முதுமொழி தோன்றியதோ! திருமாங்கல்யச் சரடு, ஒன்பது இழைகள் கொண்டது. தெய்வீக குணம், தூய்மை குணம், மேன்மை, ஆற்றல், விவேகம், தொண்டு, தன்னடக்கம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் ஆகியவைதான் அந்த ஒன்பது இழைகள். மாங்கல்ய சூத்ரம் எனப்படும் தாலிக் கயிறுக்கு ரகசிய ஆபரணம் என்றும் பெயருண்டு. மணமானவள் என்று அனைவருக்கும் தெரிய வேண்டியது மாங்கல்யச் சரடு மட்டுமே. கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டியது திருமாங்கல்யம்.

அம்பிகையின் மகிமையைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமத்தில், ‘‘காமேஸ பந்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா” என்று அம்பிகை போற்றப்படுகிறாள். சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச் சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள். ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும், அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறுதான். ஆதிசங்கரர், சௌந்தர்யலஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார். எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த திருமாங்கல்யம் எனும் தாலியை கட்டிக்கொள்வது என்பது பெண்களுக்கு இந்தக் காலத்தில் ஃபேஷனாகிவிட்டது. பாரம்பரியத்தை தூக்கி எறிந்துவிட்டு, தாலியில் என்னவெல்லாம் கொடுமைகள் செய்யமுடியுமோ அத்தனையும் செய்கின்றனர்.

வேலைக்குச் செல்லும் பெண்களில், முக்கியமாக தகவல் தொடர்பு எனும் ஐடி மற்றும் எம்.என்.சி. எனப்படும் வெளிநாடு சார்ந்த நிறுவனங்களில் பணிப்புரியும் பெண்கள், தாங்கள் வேலைக்குச் செல்லும்போது, தங்களைத் திருமணம் ஆகாதவர்போல காட்டிக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.

  1. மங்கல நாண் எனப்படும் தாலியை தேவைப்படும்போது அணிந்துகொள்வது; தேவையற்ற நேரத்தில், முக்கியமாக படுக்கைக்குச் செல்லும்போது கழட்டி ஆணியில் மாட்டிவிடுவது.

  2. திருமாங்கல்யம் அணிந்தால் திருமணமானது தெரிந்துவிடும் எனக் கருதி, திருமாங்கல்யத்துக்குப் பதில் செயின், மணி அல்லது தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பொருளை அணிந்துகொள்வது.

  3. திருமாங்கல்யத்தின் நூல்கள் பிரிந்திருந்தாலும், அதை மாற்றாமல் இருப்பது.

  4. குளிக்கும்போது, திருமாங்கல்யத்துக்கு மஞ்சள் பூசாமல் குளிப்பது.

என்று செய்யக்கூடாத பலவற்றைச் செய்கின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது.

ஜோதிடத்தில் திருமாங்கல்யம்

ஜோதிடத்தில், புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குரு பகவான்தான் காரகராவார். குரு பகவானைக் குறிக்கும்விதமாகதான், திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகிறது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் காரகர் குரு பகவானே ஆகும். கணவனின் ஆயுள் நிலைக்கவும், மனைவியின் மங்கலத்தன்மை நிலைப்பதற்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.

மேலும், குரு பகவான் புத்திரகாரகன் ஆவார். திருமாங்கல்யம் அணியும்போது, தங்கம் பெண்களின் வயிற்றுப் பகுதியில் படுவதால், புத்திர தோஷம் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

திருமாங்கல்யச் சரடு எனும் நூல் கயிற்றில், நூல் மற்றும் பருத்தி சுக்கிரனின் காரகம் பெற்றதாகும். கொடி மற்றும் கயிறுகள் போன்றவை கேதுவின் காரகம் நிறைந்ததாகும். ஒருவருக்கு மாங்கல்ய பலம் நிலைக்க (திருமாங்கல்யச் சரடு நிலைக்க), சுக்கிரனின் அருளோடு கேதுவின் அருள் மிகவும் முக்கியமாகும்.

திருமாங்கல்யத்தை கழட்டிவைக்கும் அமைப்பு யாருக்கு?

  1. திருமாங்கல்யம் என்பது மங்கலச் சின்னமாகும். அதனை எந்தக் காரணத்துக்காகக் கழட்டினாலும் அது அமங்கலம் நிறைந்த செயலே ஆகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குரு பலமிழந்த நிலையில், அதாவது வக்ரம், நீசம் பெற்ற நிலையில், பெண்கள் கணவன் உயிரோடு இருந்தாலும்கூட திருமாங்கல்யத்தைக் கோபத்திலோ, அறியாமையினாலோ அகந்தையினாலோ கழற்றும் நிலை ஏற்படும்.

  2. பெண்ணின் ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்களில் ராகு நின்றால், அவர்கள் அந்நிய கலாசாரத்துக்கு அடிமையாகி, திருமாங்கல்யத்தை கழற்றிவைக்கும் நிலை ஏற்படும்.

  3. பெண்ணின் ஜாதகத்தில், செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்கக் கூடாது. ஏழாமிடத்தில் ராகு மற்றும் அசுப கிரகங்கள் இருந்தால், திருமாங்கல்யத்தை கழற்றும் நிலை ஏற்படக்கூடும்.

  4. ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து, லக்னம், குடும்பம், சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறக் கூடாது. அவ்வாறு இருந்தால், திருமாங்கல்யத்தைக் கழட்டும் நிலை ஏற்படும்.

  5. எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளில் ராகு தொடர்புகொள்ளக் கூடாது. பெண்களுக்கு எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளில் ராகு தொடர்புகொண்டால், திருமாங்கல்யத்தைக் கழட்டிவைக்கும் நிலை ஏற்படும்.

  6. பலமிழந்த நீச சந்திரன், 6 / 8 வீடுகளில் தொடர்புகொண்டிருந்தாலும், திருமாங்கல்யத்தைக் கழட்டிவைக்கும் நிலை ஏற்படும்.

  7. அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்கக் கூடாது. பெண்களின் ஜாதகத்தில் அசுப கிரகங்கள் எட்டாமிடத்தில் உச்சம் பெறும்போது, திருமாங்கல்யம் அணிவதில் பிரச்னைகள் ஏற்படும்.

  8. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று, 7 / 8-ம் வீடுகளில் நின்றாலும், திருமாங்கயம் அணிவதில் பிரச்னை ஏற்படும்.

  9. பெண்களின் ஜாதகத்தில், காலபுருஷனுக்குக் கழுத்துப் பகுதியான மிதுனம் மற்றும் ஜெனன ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை இருந்தால், தினம் தினம் ஒரு தாலி மாற்றும் நிலைகூட ஏற்படலாம்.

தாலியைப் போற்றவும் பாதுகாக்கவும் பரிகார ஸ்தலங்கள்

  1. குரு மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்ற திருமாங்கல்யத்தைக் கழுத்தில் அணிந்துக்கொண்டிருந்தாலே பாதி தோஷங்கள் நீங்கும். அதனை, மஞ்சள் பூசி பராமரித்து வர தாலி பாக்கியம் நிலைக்கும்.

  2. சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்துக்கு அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் சென்று தரிசித்து வர மாங்கல்ய தோஷங்கள் விலகும்.

  3. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட, தாலி தோஷங்கள் நீங்கும்.

  4. வீட்டில், வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மி பூஜை செய்வது மற்றும் சுமங்கலி பூஜை செய்வது ஆகியவை மாங்கல்ய பலம் தரும் வழிபாட்டு முறைகளாகும்.

  • அஸ்ட்ரோ சுந்தரராஜன் (தொடர்புக்கு - 9498098786; இமெயில் - astrosundararajan@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com