ஆச்சரியம்!! மார்பளவு தண்ணீரில் இருக்கும் அதிசய நரசிம்மர்...! (விடியோ)

பொதுவாக இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை உலகுக்கு உண்மையாக்கிய அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்.
ஆச்சரியம்!! மார்பளவு தண்ணீரில் இருக்கும் அதிசய நரசிம்மர்...! (விடியோ)

பொதுவாக இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை உலகுக்கு உண்மையாக்கிய அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இன்றளவும் இக்கூற்றை உண்மையாக்கும் வகையில், பல இடங்களில் கோவில் கொண்ட நரசிம்மர், 300 அடி நீளமுள்ள மலைக் குகையில் மார்பளவு தண்ணீருக்கு இடையில் கோயில் கொண்டுள்ளார்.

ஜர்னி நரசிம்மர் குகை கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது. 300 அடி நீளமுள்ள மலைக் குகையின் மத்தியில் மார்பளவு தண்ணீரில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறார் நரசிம்மர். இக்கோயிலில் கோடைக் காலத்திலும் கூட மார்பளவு தண்ணீர் காணப்படும். ஒருபோதும் வறண்டு போவதில்லையாம். 

மலையை குடைந்தது போன்று பாதை ஒன்று கீழே இறங்குகிறது. ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்க பக்தர்கள் பிடித்து செல்வதற்கு வசதியாக இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்மரைத் தரிசிக்க வேண்டுமெனில் குகைக்குள் மார்பளவு தண்ணீரில் தான் நடந்து செல்லவேண்டும். இந்தக் குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறதாம். இந்தத் தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்பது ஐதீகம். 

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்தக் குகை கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சிறு குழந்தைகளையும் மார்பளவு தண்ணீரில் எடுத்துச் செல்கின்றனர். 

குகையின் முடிவில் சிவலிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் புராணத்தில் பக்தன் பிரகலாதனின் பக்தியை நிரூபிக்க வந்த நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர், ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ய வந்தார். அந்த அசுரனோ ஒரு சிவ பக்தன் என்பதால், இந்தக் குகைக்குள் தான் தவம் செய்து சிவனை வழிபட்டார். தேடி வந்து ஜலசூரனை வதம் செய்தார். 

பின்னர், இங்குள்ள சிவ பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்யும் ஜலமாக (தண்ணீராக) மாறி ஊற்றெடுத்துள்ளார். மேலும், அந்த அசுரனின் வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அங்கேயே தங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

கடினமான பாதைகளை கடந்து நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளாடு வரும் பக்தர்களுக்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com