அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறச்செய்யும் வஸந்த பஞ்சமி!

அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறச்செய்யும் வஸந்த பஞ்சமி!

நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்ப்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர்.


நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்ப்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர்.

காணாபத்யம்: (கேது)
எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி செய்வது மரபு. அதனால் விக்னங்கள் ஏதுமின்றி காரியங்கள் நிறைவேறும். முழுமுதற்கடவுள் என்று போற்றப்பட்டு எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம். மேலும் ஞானகாரகன் கேது கிரகத்தின் அதிபதி ஞான ஸ்வரூபமான விக்னேஸ்வரனாவார். 

கௌமாரம்: (செவ்வாய்)

அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; முருகன்; குமரன்; கிழவன்; குகன் என்று பலவாறாகப் போற்றப்படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம். முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். எந்தொரு பெண்ணும் தனது கணவன் அழகிலும் ஆற்றலிலும் முருகனைப் போல இருக்கவேண்டும் என விரும்புவது இயற்கையல்லவா?

சௌரம்: (சூரியன்)

நம் கண்களால் காணக்கூடிய இயற்கை தெய்வம் சூரியனால் உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச்செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம்


சைவம்:(குரு)

சைவம் என்றாலே மாமிசம் சாப்பிடாதவர் என்ற எண்ணம்தான் பலருக்கும் தோன்றும். உண்மையில் சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம் எனப்படும். சிவனிலிருந்து தோன்றியது சைவம். சிவனை வணங்காதோர் அனைவருமே அசைவர் எனப்படுவர். இங்கு அசைவர் என்றால் மாமிசம் சாப்பிடுபவர் என்ற பொருள் கிடையாது. சிவபெருமான் ஆதி தக்ஷிணாமூர்த்தியாக குரு ஸ்வரூபமாகவும் சனைஸ்வர பகவான் ஸ்வரூபமாகவும் வணங்கப்படுகின்றார்.

வைஷ்ணவம் (புதன்)

திருமகள் மணாளனான, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம். வித்யாகாரகன் புதனுக்கு அதிதேவதை விஷ்னு ஆகும்.

காலாமுகம்: (சனி, ராகு)

இந்த ஆறு பிரிவுகள் அல்லாது கபாலிகர்கள் எனும் ஒரு பிரிவினர் சிவனின் உக்ர ஸ்வரூபமான கால பைரவரை வணங்கிவந்தனர். அவர்களை காலாமுகர் என அழைப்பட்டனர். அவர்களின் பக்தி மார்கம் காலமுகம் என போற்றப்பட்டது. பின்னாலில் காலாமுகம் சைவத்தோடு சேர்ந்துவிட்டது. காலபைரவ மூர்த்தி சனி தோஷங்கள் மற்றும் ராகு தோஷங்கள் நீங்க வழிபடவேண்டிய தெய்வமாகும்.

சாக்தம்: (சந்திரன், சுக்கிரன் மற்றும் ராகு)

சாக்த வழிபாடு என்பது பெண் தெய்வங்களை வழிபடும் முறையாகும். எந்த ஒரு ஆணுக்கும் சக்தியாக விளங்குவது பெண் என்பது அனைவரும் அறிந்ததே! அதனால்தான் சிவனே தன்னுள் பாதியை அன்னைக்கு அளித்து "சக்தியில்லையேல் சிவமில்லை" எனச் சிறப்பித்தார். நவக்கிரகங்களில் பெண்களை குறிக்கும் கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கின் ஆகும். சிவனோடு சேர்ந்து நிற்கும் அன்னை தெய்வங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஸ்வரூபங்களாகும். சிவனோடு இன்றி தனித்து நிற்கும் அன்னை தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், நாக கன்னியம்மன் போன்றவை ராகு ஸ்வரூபங்களாகும்.

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாகக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

நான்கு விதமான நவராத்திரிகள்

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) 

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

சியாமளா நவராத்திரி பூஜை

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து  நவமி வரை (18.01.2018 - 26.01.2018) அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

பஞ்சமி நாளில் செய்யப்படும் இறை வழிபாடுகள் நமது நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்தவல்லவை ஆகும். ஞானாபீஷ்டம் அன்னையின் அருளால் தான் சித்தியாகும். மகரிஷி வேத வியாசர், பரத்வாஜர், பராசரர், வசிஷ்டர், பிரஹஸ்பதி, யக்ஞவால்கியர், போன்ற எண்ணற்ற ரிஷிகள் அன்னை சரஸ்வதியை வழிபட்டே ஞானஒளி பெற்றனர் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

கல்வி கடவுள் சரஸ்வதி

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான்.

சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

ஆதியில் பிரம்மதேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும் அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாகவே இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே அவரது கமண்டலத்தை கையில் எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தியது. அவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு பெரும் சக்தியாக மிகவும் பிரகாசமாக உருவெடுத்தது.

ஒரு அழகிய பெண் நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்மதேவர் முன் தோன்றினாள். சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றை தாங்கியவளாக தோன்றிய அந்த மகாசக்தி வீணையை மீட்டி தேவகானம் இசைக்க தொடங்கினாள். ஞான ஒளி பிழம்பான அன்னை தேவகானம் இசைத்தவுடன் பிரம்மதேவருடைய படைப்புகள் அனைத்தும் ஓசைநயம் பெற்றன. ஆறு சலசலத்து ஓடியது. கடல் பெருமுழக்கதோடு அலைகளை பிரசவித்தது. மனிதர்கள் மொழியறிவு பெற்று பேசத் தொடங்கினர். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பிரம்மதேவர் வாகீஸ்வரி, வாக்வாதினி, பகவதி என்றெல்லாம் அன்னையை போற்றி துதித்தார். இவ்வாறு அன்னை உருவெடுத்த தினமே வசந்த பஞ்சமி

இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது. 

சரஸ்வதி தேவியின் பெயர்கள்

சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள்... கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.

அறுபத்து நான்கு கலைகள்

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான 

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள் என" உள்ளத்தினுள்ளே

இருப்பளிங்கு வாராது இடர்"

என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார். இதன்படி பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலனாகிறது.

இந்த வஸந்த பஞ்சமி நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலைகளைக் கற்றதாகக் கூறப்படுகிறது. தென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யாரம்பம் துவக்கப்படுகிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.

ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம்

தனகாரகன் குரு, களத்திரகாரகன் சுக்ரன், வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64-ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். மேலும் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது.  பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும். 

இந்த சியாமளா நவராத்திரியின் ஐந்தாவது நாள் மற்றும் வஸந்த பஞ்சமியில் ஸ்ரீ வித்யா மற்றும் சியாமளாவை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று கலைபல கற்று தேர்ச்சி பெறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com