மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பங்காரு அடிகளார் வெள்ளிக்கிழமை அகண்ட தீபத்தை ஏற்றிவைத்தார். வரும் 11-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி சித்தர் பீட வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலை தங்க கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பகல் 12.30 மணிக்கு ஈர செவ்வாடையுடன் வந்த அடிகளார், கருவறையில் வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றினார். இதைத்தொடர்ந்து அகண்ட தீபத்தை எடுத்துக் கொண்டு, மேளதாளம் முழங்க வளாகத்தை வலம் வந்தார். பின்னர், கருவறையின் தென் கிழக்கு பகுதியில் அகண்ட தீபம் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் வந்து பக்தர்கள் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணையை ஊற்றினர். வெள்ளிக்கிழமை முதல் நவராத்திரி லட்ச்சார்ச்சனை நிகழ்ச்சி தொடங்கியது. ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் ஸ்ரீதேவி ரமேஷ், கோ.ப.செந்தில்குமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.