புதுச்சேரி: புதுச்சேரியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள், தாம் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்களாகும். புரட்டாசி மாத அமாவாசை மாளய அமாவாசை ஆகும்.அதற்கு முன் உள்ள நாட்கள் மாளய பட்சம் எனப்படும். இந்த நாட்களில் நீர்க்கடன் தருவது நல்லது. முன்னோருக்குரிய திதி நாளில் திவசம் தரலாம்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அவர்தம் குடும்பத்தினர் அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது வழக்கம்.
அதிலும் குறிப்பாக மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு நல்லது என்பதாலும், அதேபோல் இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள், இந்த மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த பலனை கொடுக்கும்
இந்நிலையில் கடற்கரை காந்தி சிலை, குருசுக்குப்பம் கடற்கரைப்பகுதி, வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரை, திருக்காஞ்சி, முத்தியால்பேட்டையிலுள்ள செங்குந்தர் மரபினர் பூந்தோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.